நம் வீடுகளில் தோட்டம் போட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சின்ன இடமாக இருந்தாலும் இரண்டு தொட்டி வாங்கி அதில் இரண்டு
பூச்செடிகளை வைத்தால் அதில் நாம் வாங்கி வந்தபின் இரண்டு இலை
துளிர் வந்தாலே அதைப்பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படும். மொட்டு விட்டு
விட்டால் அதைவிட மகிழ்ச்சி. மலர்ந்து விட்டால் அளவில்லா மகிழ்ச்சி.
நாம் அவ்வப்போது கண்டு களிக்க வசதியாக பூச்செடிகளைக் கண்ணில் படுவது போல் வைத்து இருந்தால் சந்தோஷத்திற்கு கேட்கவே வேண்டாம்.
நம் தோட்டத்தில் பூத்த மலர்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.
இங்கு மகன் வீட்டில் சிறிய தோட்டம், புல்வெளி என்று அழகாய் அமைத்து
இருக்கிறான் சில பூச்செடிகள் தொட்டியில் வைத்து இருக்கிறான். தோட்டத்திற்கு போயும், வீட்டில் இருந்தே கண்ணாடிக்கதவு வழியாகப்பார்க்கலாம், காலையில் மலர்களை மொய்க்கும் வண்டு வரும். சின்ன பட்டாம்பூச்சிகள் வரும். காய்ந்த புற்களை எடுத்துச் சென்று குளிர்காலத்துக்கு படுக்க மெத்தை அமைத்துக் கொள்ள மணிப்புறாக்கள், குருவிகள், அணில்கள் வரும். தானியங்கள் போட்டு இருக்கும் தொங்கும் கண்ணாடி ஜாடியிலிருந்து தானியங்களை சாப்பிடப் பறவைகள்,அணில்கள் வரும். நாம் படம் எடுக்கப் பக்கம் போனால் கண்சிமிட்டும் நேரத்தில் சிட்டாய் பறந்து விடும் பறவைகள். அணில் குடுகுடு என்று ஓடி ஒளிந்து கொள்ளும்.
கன கம்பீரமாய், கறுப்புப் பூனையார், இளம் ஆரஞ்சும், வெள்ளையும் கலந்த பூனையார் எல்லாம் வருவார்கள். இரவு மின்மினிப் பூச்சிகள் வந்து அழகு சேர்ப்பார்கள் தோட்டத்தை.
மகன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையில் இருக்கும் தடுப்புத் தட்டி பக்கத்தில், வைலட் கலரில் பூக்கும் ஒரு செடி இருந்தது. அதில் மஞ்சளும், கறுப்பும் கலந்த வண்ணத்துப் பூச்சி காலையிலிருந்து இரவு வரை தேன் குடிக்க வரும். பார்க்க அழகாய் இருக்கும். நாள் முழுவதும் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அலுக்கவே அலுக்காது. ஊரிலிருந்து வந்த நாட்களாக பார்த்து ரசித்த அந்தக்காட்சி இரண்டு நாட்களுக்கு முன் கலைக்கப்பட்டது. பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வந்து இருப்பவர்கள் தோட்டத்தை முற்றிலும் அழித்து விட்டார்கள். வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும் அழகைக் காணமுடியவில்லை. ஒரே ஏமாற்றம் தான். ஏதோ இவ்வளவு நாள் பழகிய நட்பைப் பிரியும் வேதனை.இதனால் தான் சித்தர்கள் ஆசை அறுமின் என்றார்களோ!
அக்டோபர் வரைதான் இந்த வசந்தம். அதன் பின் பனி விழுந்து மலர் வனம் இருக்காது. மரங்கள் இலைகளை உதிர்த்தும், வண்ணம் மாறியும் இருக்கும். வந்ததில் இருந்து பூக்களையும், வண்டுகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் நிறைய படம்பிடித்து இருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் ரசியுங்கள்.
ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்
மலர்ந்தும் மலராமலும்
மொட்டும் இருமலர்களும்
மூன்றானோம்
இறைவன் பாதத்தில்
இலைகளே மலர்களாய்
கொடி மலர்
அடுக்குப் பூ
மழையில் நனைந்த கொடிமலர்
அரளி போல் இல்லே!
இந்த பூவில் மஞ்சள் இதழில் மட்டும் எப்போதும் தேன் குடிக்கிறது இந்த வண்டு
வாழை - பனிக்காலம் வருமுன் பலன் தருமா ?
குடைபிடித்து இருக்கும் காளான்
முடி வெட்டி அழகு செய்து கொண்டு இருக்கிறது
திராட்சைக்கொடி கூட இனிக்கிறது போல
பக்கத்து வீட்டுத் தோட்டத்திற்கு வந்த வண்ணத்து பூச்சி
தோட்டத்தை இந்த ஊஞ்சலில் இருந்து ரசிப்போம் தரையை என் மகனும்,மகளும் சேர்ந்து வண்ணம் தீட்டி அழகுபடுத்தி இருக்கிறார்கள். மழை விடாமல் பெய்து கறுப்பாய் இருந்த தரையை அழகிய வண்ணத்தரைஆக்கி விட்டனர். பேரனுடன் விளையாடும் இடமும் இது தான். தோட்டத்தில் மணல் தொட்டி இருக்கிறது ,பேரன் விளையாடடுவான் எங்களுடன்.
மலர் கண்காட்சி எப்படி இருக்கிறது? தோட்டத்திற்கு வந்த மற்ற விருந்தாளிகளை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
மலர்த் தோட்டம் போல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவோம்
அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------------------------