சித்திரை விஷுக்கனி காணும் நாளில், மா, பலா, வாழை என்ற முக்கனிகளும்
மற்றும் எல்லாப் பழங்களும் இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படும்.
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பதிவில் சென்ற ஆண்டு விஷுக்கனி
கொண்டாடுவதைப் பற்றி சொல்லிவிட்டேன்.
இந்த ஆண்டு, விஷுக்கனியில் முக்கியமாக இடம் பெறும் மா, பலா, வாழையும் அதன் நன்மைகளையும் பற்றிப் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பழங்களைப்பற்றி இயற்கை சங்கத்தில் சொல்வதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
சூரியன் தனது ஒளியால் காய்களைக் கனியச்செய்கிறது.
சூரியசக்தியால் சுவை ஊட்டப்பட்ட கனிகளைச் சாப்பிடுவதால் எல்லா
உயிரினங்களும், மனிதர்களும், உடலுக்குத் தேவையான சக்திகளைப்
பெறுகிறார்கள்.
காலையில் பழ உணவு எடுத்துக் கொள்வதைப் பழ ஆகாரம் என்று சொன்னார்கள். அது தான் மருவி இப்போது பலகாரம் என்று ஆனதாய் சொல்கிறார்கள், இயற்கைச் சங்கம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர்கள். காலையில் சாப்பிடும் பழ உணவு, பொன் போன்றது. மத்தியானம் வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள். தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் அதன் மூலம் இயற்கை சத்துக்கள் கிடைக்கும் .அந்த அந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதால் இயற்கை சக்திகள் குறைவில்லாமல் கிடைக்கிறது. நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும்
இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும், குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.
முக்கனிகள்
மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்ச்சத்து நிறைந்து உள்ளது. இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. மாம்பழம் கிடைக்கும் காலங்களில்
மாம்பழத்தை உண்டு பலம் பெறலாம்.
வாழைப்பழம்:
குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்
பழம், வாழைப்பழம். இதில் வைட்டமின் A , வைட்டமின் B, B2, C
உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய
இருக்கின்றது. இந்த சத்தின் அளவு வாழைப்பழத்தில் உள்ள வகைக்கு வகை
வித்தியாசப்படும்.
பலாப்பழம்
முக்கனிகளுள் ஒன்று. தலைநரம்புகளுக்கு வலிமையக் கொடுக்கும். அதிக
அளவு சூட்டைத்தருவதால் அளவோடு உபயோகிக்க வேண்டும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல்
வளர்ச்சி சீரடையும். தேகத்தில் தோலை வழுவழுப்பாக வைத்து இருக்க
உதவும். நரம்புகளுக்கு உறுதி தரும். இரத்தத்தை விருத்தி செய்யும். பல்
சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும் , பற்களைக் கெட்டிப்படுத்தும்.
வைட்டமின் A உயிர்ச்சத்துக்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி
உண்டாகையால் உடலில் தொற்று நோய் தொற்றாது.
பொதுவாக பலாப்பழம் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவே உள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கூடப் பலாப்பழம் சேர்க்கப்படுகிறது. ஐந்து வகை
பழத்தினையும் தேனையும் சேர்ந்து தயாரிக்கும் பஞ்சாமிர்தம் உடலுக்கு
மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். விருந்துகளில் முக்கனி பரிமாறப்படுகிறது. அதற்குக் காரணம், விருந்தில் சுவையான உணவுகள் பரிமாறப்படும்போது நாம் அதிகமாய் சாப்பிட்டு விடுவோம். அதனால் உணவு ஜீரணம் ஆகவும் உடற் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் முக்கனிகளை விருந்தில் பரிமாறினார்கள். விருந்துணவை முக்கனிகளுடன் சாப்பிடும் போது ஜீரணம் சீக்கிரமாக நடந்து, இரைப்பையை விட்டு உணவு வெளியேறிவிடும். வயிற்று உபாதை இருக்காது.
எங்கள் வீட்டில் செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு:
1 டம்ளர் அவலுக்கு அரை டம்ளர் வெல்லம் வேண்டும். வெல்லத்தைப் பொடி செய்து 1 ட்ம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கல், மண் போக வடிகட்டி பின் அதைக் கொதிக்க வைத்து சுத்தம் செய்யப்பட்ட அவலில் ஊற்றி மூடி வைக்க வேண்டும், அதனுடன் சிறிது பாசிப்பருப்பு, எள் வறுத்துப் போடலாம்.,(வெல்ல நீரை கொதி வந்தவுடன் அவலில் ஊற்றிவிடவேண்டும். வெகு நேரம் கொதிக்கவைத்தால் பாகு மாதிரி ஆகிவிடும்). அதுவும் ஊறினால் நன்றாக இருக்கும். நன்கு அவல் ஊறியவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு, கிளறி , ஏல்க்காயைப் பொடி செய்து போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு போட்டால் இனிப்பு அவல் ரெடி.
புத்தாண்டு செய்திகள்
விஜய ஆண்டு நல்ல பலன்களைக் கொடுக்கட்டும்!
//மண்ணில் விசய வருடம் மழை மிகுதி
எண்ணு சிறுதானியங்கள் எங்குமே-- நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நாட்டு//
என்று பஞ்சாங்கத்தில் உள்ள பாடல் கூறுகிறது.
இப்பாடலில் கூறப்பட்டுள்ள நன்மைகளே நடக்கட்டும்.மழை பெருகட்டும்!
தானியங்கள் விளையட்டும்.
இனிய புத்தாண்டு மலரட்டும்!
இனிய வாழ்வு அனைவருக்கும் மலரட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
இந்தப் புத்தாண்டில் நல்லதே நடக்க வேண்டுவோம்.
//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.//
===== மகா கவி பாரதியார்.
வாழ்க வளமுடன்.