திண்ணையில் நான் வரைந்த கோலம் |
பொங்கல், பொங்கல் என்று ஒரு வழியாக நல்லபடியாக பால் பொங்கியது.
உங்கள் வீடுகளில் நல்லபடியாக பால் பொங்கியதா? தீபாவளி என்றால் பலகாரங்கள் செய்வது., பொங்கல் என்றால் வீட்டைசுத்தம் செய்வது.
வீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது. வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது. பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது என்று எவ்வளவு வேலை.
(கார்ட்டூன் -கணவர் வரைந்தது) |
சீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று. இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால் அப்படித்தான் ஆகி விடும்.
சுண்ணாம்புக் கோலம் அழியாமல் இருப்பது மட்டும் அல்ல- நல்ல கிருமி நாசினியும் கூட. அதனால் வீட்டின் எல்லா அறைகளிலும் பெரிது பெரிதாய் சுண்ணாம்புக் கோலம் போடுவார்கள். அப்போது உள்ள தரையில் கோலம் பளிச் என்று தெரியும். பொங்கல் அன்று முற்றம் அல்லது முன் வாசலில் நாலு பக்கம் வாசல் மாதிரி பட்டை அடித்து அதன் ஒரங்களில் காவிப் பட்டை அடித்து நடுவில் மாக் கோலம் போட்டு சூரியன் சந்திரன் எல்லாம் வரைந்து அதில் கட்டி அடுப்பு வைத்து பொங்கல் வைப்பார்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து விளக்கு முன் சாமி கும்பிட்டு என்று மாறுகிறது காலம்.
புதிதாக வந்த காய்கறிகள், புத்தரிசியில் பொங்கல், கரும்பு, மஞ்சள் இஞ்சி என்று உடலுக்கு பலமளிப்பது எல்லாம் தை மாதத்தில் .கிடைக்கிறது.
மஞ்சள் கொத்து எங்கள் வீட்டு
தோட்டத்து தொட்டியில் விளைந்தது.
நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி சொல்லவும், பயிர் வளம் பெருக நமக்கு உதவும் சூரியனுக்கு நன்றி சொல்லவும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
நாங்கள் கொண்டாடிய பொங்கல் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.
மொட்டை மாடியில் சூரிய பூஜை
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
வாழ்க வளமுடன்!