பொங்கல் வாழ்த்து படம் வரைந்தவர் என் கணவர்
பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும் பொறுப்பாட்சி வளம் கண்டு
பொங்கிடுவோம் சமுதாயப் பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம் மக்கள் குலம் போர் ஒழித்து அமைதி பெற.
---வேதாத்திரி மகரிஷி
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
---- திருவள்ளுவர்.
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச்சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
------திருவெம்பாவை
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
------- திருப்பாவை
இந்த இரு பாவைப்பாடல்களைப் பாடினால் மழை பொழியும்
என்பது நம்பிக்கை.
பொங்கல் திருநாள் இந்த ஆண்டு முன்பு போல் இல்லை. பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை. தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.
திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது.
அது : துணிப்பை என்பது எளிதானது.
தூரஎறிந்தால் உரமாவது
பிளாஸ்டிக் என்பது அழகானது
விட்டு எறிந்தால் விஷமாவது
என்று எழுதி வைத்து இருந்தார்கள்.
பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும். மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள். அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை. சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.
தரிசு நிலங்களில் கொண்டு போடும் குப்பைகளில் பெரும்பாலும் பாலிதீன் பைகள் தான். மரம், செடி கொடியெல்லாம் பிளாஸ்டிக் பூ பூத்தது போல் இருக்கிறது. இந்த கவர்கள் தான் மரம் ,செடி, கொடிகளை அலங்கரிக்கிறது.
தூர் வாரப்படாத குளம், குட்டைகளில் குடிநீர் பாட்டில்களும், பாலீதீன் கவர்களும்தான் மிதக்கிறது. அல்லியும், தாமரையும் வளர வேண்டிய குளத்தில் பாலீதீன் பைகள் நிரம்பிக் கிடக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் ஒரு பெரிய கிணறு இருக்கிறது அதில் முன்பெல்லாம் மீன்களுக்குப் பொரி போட்டுவிட்டு அந்தகவரை அப்படியே அதில் போட்டு விடுவார்கள். அப்படியே குடிநீர் பாட்டிலையும் போட்டுவிடுவார்கள். இந்த ஜனவரி 1ஆம்தேதி அங்கு போனபோது அந்த
கிணற்றை பச்சை துணி வலையால் போட்டு மூடி இருந்ததைப் பார்த்தோம்.. தண்ணீர் தூய்மையாக இருந்தது. அதைப் பார்த்தவுடன் நீர் நிலைகளை இப்படிதான் காப்பாற்றவேண்டுமோ என்ற எண்ணம் வந்து விட்டது.
நீர் ஆதாரத்தை பெருக்க, பாலீதீன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவோம்.
மழைக்காக கூட்டு பிராத்தனைகள் ,. மழை தவம் எல்லாம் நடக்கிறது.
இறைவனின் கருணை மழை பொழிந்து உழவர்களின் கஷ்டங்கள் நீங்கி
மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.
உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் இனிமை சேர்த்து, இன்பம் பெருக செழிப்புடன் வாழ்க வளர்க! வாழ்க வளமுடன்!
எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
________