என் கணவர் சிறு வயதில் பள்ளி விடுமுறையின்போது தன் சித்தப்பா வசித்த
கழுகுமலைக்கு அடிக்கடி போவார்களாம். அங்குள்ள வெட்டுவான் கோவிலுக்கு சித்தப்பாவின் மகன்களுடன் போவார்களாம். கல்லூரி ஆசிரியரான பிறகு மாணவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சுற்றுலா போயிருக்கிறார்கள். எப்போதும் எங்களிடம் அந்த கோவிலைப்பற்றி சொல்லி எங்களுக்கும் கழுகுமலையைப் பார்க்கும் ஆசையை ஏற்படுத்திவிட்டார்கள்.
இந்தமுறை என் மகன் அதற்கும் பயணத்திட்டம் வகுத்து இருந்தார். நாங்கள் அங்கு போனோம்.
திருநெல்வேலி அருகே உள்ள கோவில்பட்டியிலிருந்து சங்கரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபது கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.
கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை
1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில்
2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்
3.சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்,சமணர் கல்வெட்டுக்கள்
வெட்டுவான் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டிலிருந்து 9ஆம்
நூற்றாண்டுக்குள் வெட்டப்பட்ட இந்து கோயிலாகும். மகாபலிபுரம் போல
பாறையைக் குடைந்து செய்யப்பட்ட குடைவரை கோவிலாகும். இது மலைமீது உள்ளது. இப்போது தொல்லியல் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.
முதலில் இதைப் பார்க்கப் படிகள் ஏறிப் போய் விட்டோம். அங்கு வேலி போட்டு பூட்டுபோட்டு பூட்டி இருந்தார்கள். ஏமாற்றத்துடன் தூரத்தில் இருந்தே பார்த்தோம். சில பள்ளிச் சிறுவர்கள் மலை மீது ,ஊசி வெடி வெடித்துக் கொண்டு இருந்தார்கள்.சில சிறுவர்கள் கம்பி வேலியின் அடிவழியாகப் படுத்துக்கொண்டே உள்ளே போய் சாதனை புரிந்த மாதிரி பார்த்து வந்தார்கள்.
![]() |
வெட்டுவான் கோயில்- தூரப்பார்வையில் |
![]() |
பாதுகாப்பற்ற பழைய இறங்கும் வழி
![]()
வெட்டுவான் கோவில் - ஓவியம் :- என் கணவர்.
நாங்கள் சற்றுமேலே உள்ள மலையில் செதுக்கப்பட்ட சமணர் உருவச்சிலைகளைப் பார்க்கப் போனோம்.
கழுகுமலைப் பாறைகளில் சமணதீர்த்தங்கரரின் உருவச்சிலைகள் வெட்டப்பட்டுள்ளன.
![]() | தீர்த்தங்கரர்கள்
தலைக்கு மேற்பகுதியில் குடைகளுடன் தீர்த்தங்கரர்கள் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.
|
![]()
பார்ஸ்வநாதர் , கோமடேஸ்வரர், பத்மாவதி, அம்பிகா ஆகியோருக்கு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.
![]()
கோமடேஸ்வரர்
பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன
![]()
சமண முனிவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன
![]() | உள்ளே கல் படுக்கைகள் |
![]() | சமணர் குகைக்குச்செல்லும்வழி
|
![]()
அதன் அருகில் ஒரு அம்மன் கோவிலும், சாஸ்தா கோவிலும் உள்ளன.
![]()
சுவாமிக்கு முன்பு யானை வாகனச்சிலை உள்ளது, பெரிய உருவத்துடன் கதாயுதத்தை வைத்துக் கொண்டு ஒரு உருவச்சிலை உள்ளது. குதிரையில் சாஸ்தா உட்கார்ந்து இருப்பது போல் உருவச்சிலை உள்ளது. உள்ளூரில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் வந்து சூடம் ஏற்றி கும்பிட்டார்,
அக்கோயிலின் அருகே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தோம். இந்த இடத்திற்கு மேலே மலை உச்சிக்குப் போகும் வழி உள்ளது. மலைக் குன்றின் உச்சியில் சிறிய பிள்ளையார் கோவில் உள்ளது.,
இதற்கு என் கணவரும் மகனும் மட்டும் போய் வந்தார்கள். உச்சிக்கு செல்ல படிக்கட்டுக்கள் சில இடங்களில் கட்டி இருக்கிறார்களாம், சில இடங்களில் பாறைகளில் வெட்டப்பட்டு உள்ளனவாம். சில இடங்களில் பாதை வழுக்குப் பாறையாக இருக்குமாம்,
![]() | மலைவழி
|
![]() | உச்சிப்பிள்ளையார்
|
உச்சிக் கோவிலுக்கு நாள்தோறும் வழிபாடு இருப்பது போல் தெரியவில்லையாம் .வழியில் குரங்குகள் நிறைய இருக்கின்றனவாம். எங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவ்ரும், மகனும் மட்டும் போனதால் அவர்கள் வரும் வரை நானும் என் பேரனும் சமையல் சாமான்கள் வைத்து சமைத்து சாப்பிடும் விளையாட்டு விளையாடினோம். அவர் பருப்பு சாதம், தோசை, சப்பாத்தி செய்து கொடுத்தார். மிக்ஸியில் ஜூஸ் போட்டு கொடுத்தார். நான் சஷ்டி விரதம் இருந்தாலும் குழந்தை கற்பனையில் செய்து தந்த உணவை வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை. ரசித்து உண்டேன். காற்று சுகமாய் வீசியது. அருமையான இயற்கை சூழல். எல்லாம் மனதுக்கு மிக மிக ரம்மியமாக இருந்தது.
பாறை நிற்கும் அழகை பார்த்தால் அதை தள்ளி உருட்டி விளையாட எண்ணம் வரும். தள்ள முயற்சிப்பது -- மருமகளும், மகனும்.
வெட்டுவான் கோவிலை பார்க்க முடியாத வருத்ததோடு இறங்கினோம். அப்போது கீழே இருக்கும் சுற்றுலாப் பூங்காவைப் பார்த்துக் கொள்ளும் பணியாளரிடம் ‘பூட்டி இருக்கிறதே’ என்று கேட்ட போது, அவர் தொல்லியல் துறை வழிகாட்டியின் செல் நம்பரைக் கொடுத்து உதவினார் .அவருக்கு போன் செய்தபோது அவர் பஸ்ஸில் வந்து கொண்டு இருப்பதாய் சொன்னார்.
அவர் வரும் வரை நான் பேரனை அழைத்துக் கொண்டு அங்குள்ள குழந்தைகள் பூங்காவில் விளையாடினேன். சீ-ஸா பலகையில் உள்ளூர் குழந்தையும் பேரனும் விளையாடினார்கள்.அந்தப்பக்கம் அந்தக் குழந்தையின் அருகில் அதன்அப்பாவும், இந்தப்பக்கம்பேரனுக்கு அருகில் நானும் இருந்து கைகளால் பலகையை அழுத்தி அவர்கள் விளையாட உதவினோம். இரண்டு குழந்தைகளும் ரசித்து சிரித்து விளையாடினார்கள்.
பின் தொல்லியல் துறை வழிகாட்டி வந்தார், மீண்டும் படிகளில் ஏறி வெட்டுவான் கோவிலுக்குச் சென்றோம்.
இந்த இடத்திற்கு செல்வதற்கு புதிதாக படிகள் வெட்டப்பட்டுள்ளன. படிகளுக்கு கைப்பிடிக் கம்பிகள் வைத்து இருக்கிறார்கள். முன்பு இங்கு செல்வதற்கு வழி ஆபத்துக்குரியதாக இருந்ததாம்.
![]() | நேரே இருந்து தோற்றம்
![]() | குடைவரைக்கோயில் பிள்ளையார் |
கோவிலிலின் உள்ளே . ஒரு விநாயகர் சிலை இருக்கிறது. முன்பு அந்த இடத்தில் சிவலிங்கம் இருந்தாகக் கூறுகிறார்கள். கோவிலின் விமானத்தில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலை சுற்றி வந்தால் சிற்பங்கள் காணலாம். கோவிலின் உள்ளே இருந்த பிள்ளையாருக்கு, வழிகாட்டி பூஜை செய்து காண்பித்தார்.
|
சிவன் மான், மழு தாங்கிய தோற்றம். |
![]() |
விமானம் |
![]() |
வழிகாட்டியுடன் |
குன்றின் அடிவாரத்தில் ஒரு ஊருணி இருக்கிறது.
![]() |
ஊருணி |
மலையின் தென்புறத்தை ஒட்டி அருள்மிகு கழுகாசல மூர்த்தி (முருகன்) திருக்கோவில் உள்ளது. அருணகிரி நாதர் இத்தலத்து முருகன் மேல் திருப்புகழ் பாடி இருக்கிறார். கழுகாசல மூர்த்தி விபூதி அலங்காரத்தில் சிரித்தமுகத்தோடு காட்சி அளித்தார். முருகனுக்கு நேரே நிறைய பெண்கள் அமர்ந்து திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் எல்லாம் பாடிக் கொண்டு இருந்தார்கள்..நாங்கள் அங்கு சென்ற அன்று கந்தசஷ்டியின் 5ஆம் நாள். அங்கு 6 நாளும் சூரசம்காரம் நடைபெறுமாம். காகிதம், மூங்கில் கொண்டு செய்த -சூரர்கள் போல் தோற்றம் கொண்ட கவசத்துக்குள் மனிதர்கள் இருந்தார்கள்.
நான்கு சூரர்கள் இருந்தார்கள் அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன.
அங்கு திரண்டு இருந்த மக்கள் எங்களை சம்காரம் பார்த்து விட்டுப் போங்கள் என்றார்கள் .நாங்கள் இரவுக்குள் மதுரை போக வேண்டும் என்பதால் அதைப்
பார்க்க முடியவில்லை. திருவிழாவுக்கு கடைகள் நிறைய போட்டு இருந்தார்கள்.
இளநீர் வாங்கி குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
என் மகன் , மருமகள் இருவரும் காமிராவில் ஆசை தீர படங்கள் எடுத்தார்கள். அவ்வளவையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைதான். . ஆனால் பதிவு நீண்டு விடும்.
கல்வெட்டு, கோமடேஸ்வரர், சமணகல்படுக்கை, சாஸ்தா கோவில் உச்சிபிள்ளையார் , சீசா-பலகை படங்கள் எல்லாம் என் கணவர் செல்லில் எடுத்தது.
கழுகுமலை ! பார்க்க வேண்டிய இடம் .
_________________________