
வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும்என்பதை எடுத்துக் காட்டுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப்புத்தாண்டில் இனிப்பு, கசப்பும் என்று எல்லாசுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் என்பார்கள். அதை ஒழுங்காய் கடைபிடிப்பது தமிழ்ப்புத்தாண்டில் தான். இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல், புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம் என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
வெயில் காலத்தில் வேப்பமரத்தின் காற்று எல்லோருக்கும் மிக தேவையாக இருக்கிறது. கிராமப்புரத்தில் கோடைக்காலத்தில் வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது, கயிற்றுக் கட்டிலை மரத்தடியில் போட்டு தூங்குவது என்று இயற்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.
சித்திரை மாதத்தில், புளி, மாங்காய், மாம்பழம், பலா,வாழை மஞ்சள், இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். வேப்பம்பூ இப்போது தான் கிடைக்கும். அதைக் காயவைத்து, மோரில்உப்புடன் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள், அதன் மருத்துவப்பயன் அறிந்தமையால்.வேப்பம்பூவை வெந்நீர் விட்டு டீ டிகாக்ஷன் போல் இறக்கி, தேன் அல்லது சர்க்கரைசேர்த்து குடித்தால், வாதம், பித்தம், அகலும். வாய்க்கு ருசி, வயிற்றுக்கு பசி ஏற்படும், சரும நோய்கள் விலகும் என்பார்கள்.
சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள். இந்தசமயத்தில் பூக்கள், பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும். அதைய நாம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக்கொள்ளலாம்
பழங்கள்:
சமைக்காத உணவுகளாக பழங்கள் பச்சைக் காய்கறிகள், சாப்பிடலாம். அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்பதுநல்லது. சமைக்காத உணவாக பழங்களை, பச்சைகாய்கறிகளை உண்ணலாம். இந்தசீஸனில் மா, பலா, வாழை பழங்கள், மற்றும் எல்லா பழங்களும் நிறையகிடைக்கும். “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்.”
நாம் தமிழ்ப்புத்தாண்டில் இறைவனுக்கு என்றுவழங்கும் பிரசாதங்கள் எல்லாம் என்ன பயன்களைத் தருகின்றன, உணவில் கசப்புச் சுவையை ஏன் கலந்து உண்ணச் சொல்கிறார்கள்?அதன் காரணம் என்ன?
நம் வீட்டை அலங்கரிக்கும் மாவிலை, வாழைமரத்தின் பயன்கள் என்ன என்பதையும் ஏன் அதை நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள் என்பதை எல்லாம் எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் என்ற புத்தகம் மூலம் சொல்கிறார் Dr. C.K.திரு. மாணிக்கவாசகம். அவர்கள் எழுதியதைப் படித்தேன் அதில் சில பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:-
பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள் :
நிலம் - அருகம்புல்
நீர் - மாவிலை,
நெருப்பு –வாழைஇலை
காற்று –வேப்பிலை.
ஆகாயம் –வெற்றிலை
அருகம்புல்:
அருகம்புல் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கிறோம். அதுநோய்களை நீக்கும் “ஆகாதது அருகம்புல்லில் ஆகும்”என்பது பழமொழி.வாரம் ஒரு முறை கஷாயம் வைத்து குடித்தால் வலியும், வியாதியும் இன்றி
வாழலாம். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தோல்நோய்கள், புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களையும் போக்கும் குணம் அருகம்புல்லுக்கு உண்டு.
மாவிலை:
மாவிலை கஷாயம் நீரின் மூலமாகப் பரவும்நோய்களைப் போக்குகிறது.கங்கை நீர்என்று கலசங்களில்நீரை எடுத்து
மாவிலை வைத்து கும்பாபிஷேகங்களிலும், புதுமனை புகுவிழாவிலும், மற்றும் விழாக்களிலும் வைத்துவணங்கி, அந்த நீரை மாவிலைகளால் தெளித்துத் தூய்மைப்படுத்தி, பின் மக்கள் மீதும் வீடுகள் மீதும் மற்றும் எல்லா இடங்களிலும், தெளிப்போம். தூய்மையான நீரை தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்கிறோம். வீட்டில் மாவிலை கட்டுவதும் காற்றில் உள்ள நீரைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள நீர் நிலைகளையும் சுத்தம் ஆக்கும்.
வாழைமரம் கட்டும் காரணம் :
விஷமுறிவுக்கு வாழை என்பார்கள். திருமணம்,கோயில் விழாக்கள் வாயில்களில் வாழை கட்டுவதற்கு காரணம், விழாக்களின் போது தீங்கு இழைக்க கூடிய ஜந்துக்களை விரட்டவும், தவறி விஷஜந்துக்கள்
தீண்டிவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்யவேறு எங்கும் தேடிக்கொண்டு இருக்காமல் உடனே அருகில் கட்டி இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழைப்பட்டையை எடுத்து தீமூட்டி அனலில் வாட்டி,வதக்கி சாறு எடுத்து அரை டம்பளர் உள்ளே கொடுத்து, பின் சாறு எடுத்து உடல் முழுக்க பூசிவிட்டால்விஷக்கடியிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள். இப்படிநல்லது கெட்டது என்று மக்கள் கூடும் இடங்களில்வாழைமரம் கட்டும் காரணம் இது தான் என்பார்கள். ஆதிகாலத்தில் வீடுகள் கோயில்கள் எல்லாம் காட்டுப் பகுதி சூழ்ந்த இடங்களில் தானே இருந்தன!
வேப்பிலை சக்தி கடவுளுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு வேண்டிய சக்திக்கும் தான். வேப்பிலை கஷாயம் அருந்தி வந்தால், உடலிலுள்ள நோய்க் கிருமிகள் அழிவதுடன்கிருமிகள் உற்பத்தி ஆகாமல் அன்றாட உடல் உறுப்பு தேய்மானத்தை தடுத்துஉடலைப் புதுப்பிக்கிறது. பிணியின்றி வாழ வைக்கிறது. கசப்பு சுவை பிடிக்காது என்பதால் அதைச் சாப்பிடாதவர்
களுக்கு உடலில் இருக்கும், எலும்பு மூட்டுக்கள்,பாதங்களின் தசைகள், பற்கள், என்று பல உறுப்புக்கள் தேய்மானம் ஆகிறது. கசப்பு உண்டு வந்தால், தேய்மானம் தடுக்கப் படுகிறது. பாவைக்காய், சுண்டைக்
காய், போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கடவுளுக்குப் படைப்பதற்கு மட்டும் அல்ல வெற்றிலை ,அறுசுவை உணவை அளவோடு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொள்வதால் உண்ட உணவு நல்ல முறையில்செரித்து உடலுக்கு சக்தி கிடைக்கும். அதனால்.இப்படி பண்டிகையில் சேர்த்து கொள்ளும் பொருட்கள் எல்லாம் காரண காரியமாய் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த நந்தன ஆண்டு, அச்சம், கவலை, நோய், நொடி முதலியவற்றை போக்கிமனநிறைவாய், மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.
எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று வாழ இந்த
இனிய புத்தாண்டில் வாழ்த்துகிறோம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்.